அன்னக் கொடியிடையும் அன்புநிறை பேச்சழகும்
வன்கூட்டில் வந்து வளம்சேர்க்கும் - நன்னெறியாள்
கன்னல் சுவைக்கும் கனியிதழ் காண்பதற்கே
மின்னல் ஒளிரும் மிகுந்து!
கொட்டும் மழைக்குள் கொடுகும் நுனினாக்கும்
மெட்டுக்கள் போடுமவள் மெல்லிடைக்கே -பட்டுடுத்தி
மொட்டாய் நடந்தால் முழுநிலவு தாள்பணியும்
வட்டக் குடைபோல் வளைந்து !
பொன்னூஞ்சல் கட்டியுனை பூக்களால் சோடித்தும்
என்னெஞ்சில் ஏந்துகிறேன் ஏந்திழையே -மென்னுள்ளம்
வெந்துனிதம் மேனி வியர்க்கையிலே ! உன்நினைவும்
கந்தமாய் வீசும் கமழ்ந்து !
நாவில் இனிக்கும் நறுஞ்சொற்கள் நீவிடுத்தே
நா..வில் சுமந்தாய் நளினமே -பூவில்
கமழும் புகழினிய கண்ணிதளால் ! பூப்பாய்
அமிழும் உயிருக்குள் அன்பு !
வெந்தழியும் வேளையிலும் வேகாதே உன்நினைவு
சிந்தையிலே வாழுமடி சிற்பமாய் - நந்தியெனத்
தள்ளிநீ போகையிலும் தாங்கும் வரம்பெற்றே
உள்ளுருகி நிற்கும் உயிர் !
கன்னலென காரிகையைக் கற்றுவிடச் சேர்ந்துவரும்
என்பாவுக் கென்றும் எழில்!
பிரியமுடன் சீராளன்