சித்தம் நுழைந்திடும் சோர்வைச் - சிறு
சேலைத் தலைப்பினால் கழைவாள்
நித்தம் உறங்கிடும் போதில் - தலை
நீவித் துயில்தர விளைவாள் !
வெல்லக் குவளையாய் இதழ்கள் - இரு
விழிகளும் அமிழ்தக் குறள்கள்
செல்லக் குழந்தையாய்ச் சிரிப்பு - இதம்
சேர்க்கும் செந்தமிழ் விரிப்பு !
முல்லை மணந்தரும் பேச்சில் - நறு
முகையென மலர்வாள் மூச்சில்
இல்லை எனும்சொல் அறியாள் - தினம்
இறைமனம் காட்டும் நெறியாள் !
எது..கை கொடுத்தும் இசைப்பாள் - கவி
எதுகை விடுத்தும் இனிப்பாள்
மதுகை இருந்தும் மறைப்பாள் - மலர்
மது..கை கொடுத்தும் முறைப்பாள் !
புத்தகம் அவளது தங்கை - எனைப்
பொலிய வைத்திடும் மங்கை
வித்தகம் புரியும் விரலாள் - இசை
வியக்கும் மதுரக் குரலாள் !
பச்சைப் பார்வைகள் தந்தாள் - என்
பருவத் தீபுக வந்தாள்
இச்சைப் போர்வைகள் களைந்தாள் - மனம்
இருக்கும் இடத்தில் நுழைந்தாள் !
வண்ணக் கனவுகள் இன்னும் - உயிர்
வளர்த்துக் கவியாய் மின்னும்
எண்ணச் சிறகுகள் அல்லும் - வலி
இருந்தும் பறந்ததைச் சொல்லும் !