சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

Wednesday 14 September 2022

மௌனத்தின் மொழி !



சிறைவைத்து  மேகத்தைச் சிதைத்தாலும் நெருப்பாகா!

சில்லென்ற காற்றொன்றே வீசும் !-விழி 

நிறைந்திட்ட கண்ணீரால் நினைவென்றும் அழியாது !

நிதமுன்றன் கதையொன்று பேசும் !


மெழுகொன்று உருகித்தன் ஒளிகொண்டு இருள்போக்கும்

மிடுக்காக இருக்கின்றேன் இன்றும்! - தினம்

அழுகின்ற நிலைவந்து அடிநெஞ்சம் வியர்த்தாலும் 

அன்பைத்தான் விதைப்பேன்’நான் என்றும் !


மொழியொன்றை  உதிர்க்கின்ற முனைப்பொக்கும் செயலுண்ட 

மோனத்தால் இளங்காலம் போச்சு!- இனிச் 

செழிக்கின்ற நிலைவந்தும் சிறகொன்றிப் பறக்காது

சிந்தைக்குள்  அடைபட்ட மூச்சு!


அலையின்றிக் கடலில்லை! அழகின்றிக் கலையில்லை! 

அறிந்தார்க்கு! மயக்கங்கள் இல்லை !-இந்த 

நிலையில்லா வாழ்வொன்றில்! நிறைகாணா நெஞ்சத்தில் 

நிதஞ்சேரும் தயக்கங்கள் தொல்லை!


இடிவந்த வானத்தில் இடர்பட்டும் கார்மேகம் 

இசைபோல மழைக்காற்று வீசும்!- உடல்  

அடிபட்டுச் சிதறுண்டு அழிந்தாலும் ! உயிர்கொண்ட ! 

அணுவொன்றின் துகளொன்று பேசும் !


நிழலில்லா வானத்தில் நிழல்தேடும் பருந்தாக ! 

நினைவெல்லாம்  வெறுமைக்குள் வாடும் !-உன் 

கழல்பட்ட மண்ணெங்கும் களிப்போடு மலர்பூக்கும் 

காட்சிக்குள் தேனாறு ஓடும் !


பாவலர் சீராளன் 

சொப்பன விழிகள் !




காரிகையா, காரெழிலா, காட்டுமல்லி வாசனையா?

கற்பனைகள் உறங்குநிலை போச்சு! -விழி

தூரிகையா, ஓவியமா  தோகையிவள் நாணுகையில் 

சொப்பனத்தில் கரையுதென்றன் மூச்சு!


ஏதுமொழி, ஏதெழுத்து ,என்றறியா நெஞ்சமதில் 

ஏடுகளைத் தேடவைத்த கோதை  !- மறை

ஓதுமொழி யாயிருக்கும் ஒண்டமிழைப் பாடவைத்து 

ஓசைநயம் ஊட்டிவிட்ட மேதை!


வாழுமொரு நாளிகையும் வாழ்த்துபல கூறுமடி

வஞ்சியெழில் தந்தயிறை தேடி!- வலி

சூழுமொரு வேளையிலும் சகந்தமிக வீசுமடி 

சொல்லினிய உன்பெயரைச் சூடி! 


பதவுரைகள் அற்றகவிப் பார்வையொன்று போதுமடி

பயனறிய  ஏதுமில்லை பாரில்!- இனிப்

புதுமொழிகள் கற்றுமென்ன புலமைகளைத் தந்துவிடும் 

புத்துயிராய் நீயிருக்கும்  போதில்!


கோடைமழைப் பெருக்காகக் கோபத்தில் நீ...நடக்கக் 

கொலுசுகளும் மோனித்த காட்சி!-குளிர்

வாடைதொட்டு  மொட்டுகளை வம்புசெய்த போதுமவை 

வாய்மூடி நின்றகதை யாச்சு!


காற்றினிசை போலினிக்கும் கவிதைமொழி கற்றவனைக் 

களவாடிச் சென்றதொரு மேகம்!- இவன்

தோற்றமினி இங்கில்லை தொலைந்தயிடம் பால்வெளிதான்

துகள்களெனப் பிரிந்திருக்கும் தேகம்!

 

பாவலர் சீராளன்