சிறைவைத்து மேகத்தைச் சிதைத்தாலும் நெருப்பாகா!
சில்லென்ற காற்றொன்றே வீசும் !-விழி
நிறைந்திட்ட கண்ணீரால் நினைவென்றும் அழியாது !
நிதமுன்றன் கதையொன்று பேசும் !
மெழுகொன்று உருகித்தன் ஒளிகொண்டு இருள்போக்கும்
மிடுக்காக இருக்கின்றேன் இன்றும்! - தினம்
அழுகின்ற நிலைவந்து அடிநெஞ்சம் வியர்த்தாலும்
அன்பைத்தான் விதைப்பேன்’நான் என்றும் !
மொழியொன்றை உதிர்க்கின்ற முனைப்பொக்கும் செயலுண்ட
மோனத்தால் இளங்காலம் போச்சு!- இனிச்
செழிக்கின்ற நிலைவந்தும் சிறகொன்றிப் பறக்காது
சிந்தைக்குள் அடைபட்ட மூச்சு!
அலையின்றிக் கடலில்லை! அழகின்றிக் கலையில்லை!
அறிந்தார்க்கு! மயக்கங்கள் இல்லை !-இந்த
நிலையில்லா வாழ்வொன்றில்! நிறைகாணா நெஞ்சத்தில்
நிதஞ்சேரும் தயக்கங்கள் தொல்லை!
இடிவந்த வானத்தில் இடர்பட்டும் கார்மேகம்
இசைபோல மழைக்காற்று வீசும்!- உடல்
அடிபட்டுச் சிதறுண்டு அழிந்தாலும் ! உயிர்கொண்ட !
அணுவொன்றின் துகளொன்று பேசும் !
நிழலில்லா வானத்தில் நிழல்தேடும் பருந்தாக !
நினைவெல்லாம் வெறுமைக்குள் வாடும் !-உன்
கழல்பட்ட மண்ணெங்கும் களிப்போடு மலர்பூக்கும்
காட்சிக்குள் தேனாறு ஓடும் !
பாவலர் சீராளன்