சந்தமிகத் தந்தகவிச் சிந்தனையும் எந்தனுயிர்
வந்தவளைச் சார்ந்துமணம் வீசுதே - அவள்
கந்தமிகக் கொண்டகுழல் விந்தையெனத் தென்றலதும்
உந்தியெழத் தந்துதமிழ் பேசுதே !
அந்திவருந் தந்தியவள் அஞ்சிறையுள் இட்டதனால்
முந்திவரும் கந்தமதைக் கூறுதே - விழி
குந்திமகன் அம்பெனவும் கோதைமகன் அன்பெனவும்
விந்தைபுரிந் துள்ளமதைக் கீறுதே !
எந்தயிடம் வந்திடினும் ஏந்திழையாள் அன்புதனைச்
சிந்தைதனில் வைத்துமகிழ்ந் தாடுவேன் - விதி
மந்தகுணந் தந்துவுடல் மண்ணறையில் இட்டபினும்
மஞ்சரியாள் கொஞ்சுதமிழ் தேடுவேன் !
பங்கயமாய்க் காலையவள் பண்ணழகுப் பார்வைதரப்
பாவலனாய்ப் பாடிமகிழ்ந் தாடுவேன் - இல்லை
கங்குலெழும் முன்னொளியில் இங்கவளும் இல்லையெனில்
கற்பனைகள் ஈன்றமனம் மூடுவேன் !
பண்பொளிரும் பைங்கொடியாள் பஞ்சுமொழிப் புன்னகையாள்
பச்சையிதழ் இட்டமதுக் காரிகை - வான்
தண்ணொளிரும் வெண்மதியின் தங்கையெனத் தன்னினைவைத்
தந்துயிரைத் தொட்டபுதுத் தாரகை !
பாவலர் வீ. சீராளன்