சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

Wednesday 14 September 2022

மௌனத்தின் மொழி !



சிறைவைத்து  மேகத்தைச் சிதைத்தாலும் நெருப்பாகா!

சில்லென்ற காற்றொன்றே வீசும் !-விழி 

நிறைந்திட்ட கண்ணீரால் நினைவென்றும் அழியாது !

நிதமுன்றன் கதையொன்று பேசும் !


மெழுகொன்று உருகித்தன் ஒளிகொண்டு இருள்போக்கும்

மிடுக்காக இருக்கின்றேன் இன்றும்! - தினம்

அழுகின்ற நிலைவந்து அடிநெஞ்சம் வியர்த்தாலும் 

அன்பைத்தான் விதைப்பேன்’நான் என்றும் !


மொழியொன்றை  உதிர்க்கின்ற முனைப்பொக்கும் செயலுண்ட 

மோனத்தால் இளங்காலம் போச்சு!- இனிச் 

செழிக்கின்ற நிலைவந்தும் சிறகொன்றிப் பறக்காது

சிந்தைக்குள்  அடைபட்ட மூச்சு!


அலையின்றிக் கடலில்லை! அழகின்றிக் கலையில்லை! 

அறிந்தார்க்கு! மயக்கங்கள் இல்லை !-இந்த 

நிலையில்லா வாழ்வொன்றில்! நிறைகாணா நெஞ்சத்தில் 

நிதஞ்சேரும் தயக்கங்கள் தொல்லை!


இடிவந்த வானத்தில் இடர்பட்டும் கார்மேகம் 

இசைபோல மழைக்காற்று வீசும்!- உடல்  

அடிபட்டுச் சிதறுண்டு அழிந்தாலும் ! உயிர்கொண்ட ! 

அணுவொன்றின் துகளொன்று பேசும் !


நிழலில்லா வானத்தில் நிழல்தேடும் பருந்தாக ! 

நினைவெல்லாம்  வெறுமைக்குள் வாடும் !-உன் 

கழல்பட்ட மண்ணெங்கும் களிப்போடு மலர்பூக்கும் 

காட்சிக்குள் தேனாறு ஓடும் !


பாவலர் சீராளன் 

7 comments:

KILLERGEE Devakottai said...

வணக்கம் பாவலரே நலமா ?
அழகிய வரிகள் வர்ணனை மிகச் சிறப்பாக இருக்கிறது.

படம் இக்கவிதைக்கு மேலும் சிறப்பாக்கி விட்டது. - கில்லர்ஜி

சீராளன் said...

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஜி நான் மிக்க நலம் தாங்களும் நலம்பெற்று இருக்க வேண்டுகிறேன்

முற்றும் அறிந்த அதிரா said...

மேஜரே, கவிஞரே நலம்தானே?... உங்கட பக்கம் பின்னூட்டம் போடுவது கஸ்டமாக இருக்குது, ஏதோ வைரஸ் குறுக்க வந்து தடுக்கிறது..

கவிதை மிக நன்று, எனக்குத்தான் கொஞ்சம் புரியவில்லை:)

சீராளன்.வீ said...

வாங்கோ வாங்கோ வணக்கம் பூசாரே ! நான் நலம் நலமே தங்கள் வலைக்கு வந்திட்டிடீங்களா இதோ வந்து பார்க்கிறேன் ! என்னது என் வலைக்கு காவலா வைரஸ் இருக்கா யாரந்த கிறுக்கன் ! சரி பார்க்கிறேன் பூஸாரே தங்கள் வருகைக்கு நன்றி ! என்னது உங்களுக்கே கவிதை புரியலையா ஐயோ ஐயோ குருநாதா ! நான் என்ன பண்ணுவேன் இப்போ !

முற்றும் அறிந்த அதிரா said...

ஹா ஹா ஹா கவிதை தடம்மாறிப்போச்ச்ச்:)), முன்பெனில் காதல்(தோல்விக்)கவிதையாகவே வரும்:))

சீராளன்.வீ said...

ஹாஹாஹா மீழ்வருகைக்கு நன்றி பூசாரே அட நம்ம ஒப்பாரியையா சொல்றீங்க இதோ வந்திட்டே இருக்கு அடுத்த பதிவில் .

முற்றும் அறிந்த அதிரா said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் நல்லாத்தானே போகுது:) திரும்படியும் எதுக்காக்கும் ஒப்பாரி ஹா ஹா ஹா:).

ஒவ்வொரு முறையும் உங்கட கொமெண்ட்டுக்கு, நான் ரோபோ இல்லை என நிரூபிக்க வேண்டிக்கிடக்குதே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. எனக்கு அதை நிரூபிக்கப், பத்திக் கொண்டு வருது ஹா ஹா ஹா:))..