நிறம் பிரித்த வானவில்லின்
நிழல் படிந்த மேகத்தில்
நீ சாய்ந்த பொழுதுகளில்
நித்திரைகள் சுவர்க்கமடி...!
பனி மூட்டம் வியர்த்த
பாலை மரத்தினிலே
கிளிக்கூட்டம் தூங்கினார்ப்போல்
ஒளிந்து கொண்டாய் புரியவில்லை...!
மாலைக்கடலோரும்
மருதாணி விரல் பதிய -உன்
சேலைக்கு முத்தமிட
செவ்வானம் தாழ்ந்ததடி ..!
மூச்சுக் கனக்கையிலே
முல்லைப்பூ முகமாகி-என்
பேச்சுக்கு மௌனிக்க
பேதை நீ கற்றதெங்கே...!
இருவரி குறள் சொல்லா
திரு வரி பெயர் கொண்டாய்
ஒருவரி சொல்லிடவா
கருவிழி கலையுன்னை...!
திண்ணை மொழிக்குள்ளே
தித்திக்கும் வார்த்தைகளில்
வெண்ணை கலந்து வச்ச
வெல்லக் கலசம் நீ ..!
கொங்கை சுமக்கும்
கொடியிடை அசைவினிலே
கங்கை சுமந்தவனும்
கடமை மறப்பானடி...!
புலமைக்கு எட்டாத
புதிரான விசை தந்தாய்
இயலாமை சுரந்ததனால்
இறக்கைகள் பாரமாச்சே ..!
ப்ரியமுடன் சீராளன்
5 comments:
''..மூச்சுக் கனக்கையிலே
முல்லைப்பூ முகமாகி-என்
பேச்சுக்கு மௌனிக்க
பேதை நீ கற்றதெங்கே...!''
இப்படிப் பல வரிகள் மிக நன்றாகப் பொருந்தியுள்ளன.
இனிய நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
மிக்க நன்றி வேதா.இலங்காதிலகம்
supperb
புலமைக்கு எட்டாத
புதிரான விசை தந்தாய்
இயலாமை சுரந்ததனால்
இறக்கைகள் பாரமாச்சே ..!
அழகான வார்த்தைக் கோர்வை ..
மிக்க நன்றி சங்கர் சசிகலா தங்கள் வருகைக்கு நன்றி
Post a Comment