கற்பனையில் நீ பேச
கவிதைகளும் மணக்குதடி
நினைவுக்குள் நீ சுரக்க
நித்திரைக்கு தவணை சொன்னேன்...!
நிலா முற்றம் கறுக்கும்
நீ இல்லா ராத்திரியில்
உலாப்போகும் தென்றலுக்கும்
உள்ளுக்குள் வியர்க்கும்...!
செவ்விதழ் ஓரம்
சிரிக்கும் இரு மச்சம்
கவ்விட சொல்லும்
கருவிழி இமைகள்
சுகந்தம் சேர்ந்த
சுருட்டை குழல்கள்
மெல்லிய தேகம்
மேகமே உன்னழகு....!
மின்னல் சிரிக்க
விண்மீனும் பனித்தூவ
கன்னிப்பூ மலர
கதை சொன்ன காற்றே
கன்னல் மொழி தேடி
காய்கின்றேன் நாள்தோறும்
என்னை நினைத்தே
எழில் மேகம் நனையுதடி...!
எல்லைக் கோடற்ற
எண்ணக் பாதைகளை
வண்ணச் சோலைகளாய்
வளரவிட்ட செவ்வந்தியே
கன்னக்குழி சொன்ன
கவிதைக்குள் பொய் பூக்க
அன்னக் கொடி தழுவும்
ஆசையெல்லாம் எரியுதடி...!
கனவுக்குள் வருவேன் என்று
கண்ணசைத்து பொய் சொல்லி
சொர்ப்பனத்தை விலைபேசி
வர்த்தகமாய் ஆக்கியவளே
எறும்புக்கு உணவுதேடி
கரும்புக்காடழித்தார்ப்போல்
உன்காதல் தனைத்தேடி
உயிரெல்லாம் தீக்காயமடி...!
என்றோ ஒருநாள்
என்னை நினைத்துப்பார்
தீண்டிப்போன உன் மூச்சுக்காற்றில்
எங்கேனும் ஒட்டியிருக்கும்
எச்சங்கள் சொல்லும்
உன்னால் கசங்கிய இதயத்தின்
உதிரத் துளிகள் எழுதியதெல்லாம்
உன்பேர் அன்றி வேறில்லை என்று...!
பிரியமுடன் சீராளன்
4 comments:
அன்புச் சகோதரா..
நிஜமாய் விழுந்தன நினைவின் கீதமே
சுகமாய் இருந்ததுன் சோக வரிகளே
வரமோ சாபமோ உன்வலிதானிங்கே
எதுவேயாகினும் உனக்கு ஆறுதல் நாமிங்கே...
வலிசுமந்த கவிதைக்கு வாழ்த்துக்கள்!
மிக நன்றி இளமதி
தங்கள் வருகைக்கும் ,
அன்புகலந்த ஆறுதல் வார்த்தைகளுக்கும்....வாழ்க வளமுடன்
அருமையான வரிகள்.
மிக்க நன்றி சோபனா...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
Post a Comment