சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

Tuesday 13 September 2016

விருத்தப் பா ,என் விருப்புப் பா !



நீரடித் துழுத மண்ணில் 
      நிறைவள மேகி மீண்டும் 
வேரடி முளைத்தல் போலும் 
      விளமுடன் தேமா காயும் 
சீரடிச் சிறப்பை மேவிச்  
      செப்பிடும் விருத்தப் பாவில் 
தாரடி கொத்தைப் போன்று 
      தழைத்திடும் எதுகை மோனை!


கண்ணொரு கலையை நோக்கின் 
      கற்பனை நெஞ்சில் ஊறும்!
பண்ணொடு பரிசம் போட்டுப் 
      பைந்தமிழ் மாலை சூடும்!
வண்ணமாய் வரையும் இந்த 
      வழுவிலா விருத்தப் பாக்கள்  
மண்ணுள வரையில் பூக்கும் 
      மல்லிகை வாசம் விஞ்சும்!

நல்லுரை கூறும் வேந்தர் 
      நயமுடன் தந்த கற்கைத் 
தொல்லுரை நெஞ்சில் ஏற்றித் 
      தொடர்கவி பாடும் வல்லார் 
சொல்லுரை சொக்கும் வண்ணம் 
      சுருதியில் குழைத்துப் பாடின் 
கல்லுரை போல மண்ணில் 
      காலமும் கடந்து வாழும் !

அஞ்சனை வயிற்றில் வாழ்ந்த 
      அனுமனின் கருணை பெற்றால் 
வஞ்சனை மறைதல் போல 
      மருவிடா விருத்தப் பாக்கள் 
கஞ்சனை நாணம் கொள்ளும் 
      கன்னியின்  அழகில் காய்ந்த 
நெஞ்சனை மாற்றும் இன்னோர் 
      நிறைகவி கம்பன் ஆக்கும் !

கூவிடும் குயிலோ ! பிள்ளை 
     குழைத்திடும் அமுதோ ! தாசர் 
பாவிடும் அரங்கோ ! வீசும் 
     பைந்தமிழ் சிறப்போ ! முல்லை 
தூவிடும் மணமோ ! ஔவை 
     துலக்கிய மறையோ ! நல்லோர் 
நாவிடும் வாழ்த்தோ ! இந்த 
      நலந்தரு விருத்தப் பாக்கள் !

                  ****************
பிரியமுடன் பாவலர் .வீ.சீராளன் 

20 comments:

துரை செல்வராஜூ said...

>>> கண்ணொரு கலையை நோக்கின்
கற்பனை நெஞ்சில் ஊறும்!
பண்ணொடு பரிசம் போட்டுப்
பைந்தமிழ் மாலை சூடும்!..<<<

அருஞ்சொல் அருமை அலங்காரம்..
அருந்தமிழ் தேனீயின் ரீங்காரம்!..

சீராளன்.வீ said...

வணக்கம் ஐயா !

தங்கள் முதல் வருகைக்கும்
முத்தான பதிலுக்கும்
நெஞ்சம் நிறைந்த நன்றிகள்
வாழ்க வளத்துடன் !

Nagendra Bharathi said...

அருமை

Yaathoramani.blogspot.com said...

படிக்கப் படிக்க நாவினித்தது
மனம் குளிர்ந்தது
வாழ்த்துக்களுடன்...

அம்பாளடியாள் said...

அருமையான பாமாலை! தம்பி சீராளனிற்கு இது கைவந்த கலை
சொல்லவே வேண்டாம் எப்போதும் இவன் பாடல் தனித்துவமாக
விளங்கும் வாழ்த்துக்கள் சீராளா.

Unknown said...

#கல்லுரை போல மண்ணில் காலமும் கடந்து வாழும் !#
உண்மை இது அய்யா ,உங்கள் கவிதையில் சொக்கிப் போனேன் அய்யா !

கரந்தை ஜெயக்குமார் said...

விருத்தப் பாக்கள்
அருமை நண்பரே

Thulasidharan V Thillaiakathu said...

அருமையாக உள்ளன விருத்தப்பாக்கள் சீராளன்! உங்கள் தமிழை எப்போதும் ரசிப்பவர்கள் நாங்கள். எங்களுக்கு இப்படி எல்லாம் எழுத வராதே...

சாரதா சமையல் said...

பாமாலை மிக அருமை.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

விருத்தப்பா இனி எங்களின் விருப்பப்பா கூட. பாக்களைப் பற்றி நான் அறிந்திருக்கவில்லை. ஆனால் உங்களது பதிவைப் பார்த்ததும் அதிகம் ரசித்தேன். நன்றி.

சீராளன்.வீ said...

வணக்கம் நாகேந்திர பாரதி !

தங்கள் வரவுக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி வாழ்க வளத்துடன் !

சீராளன்.வீ said...

வணக்கம் ரமணி ஐயா !

தங்கள் வரவுக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி வாழ்க வளத்துடன் !

சீராளன்.வீ said...

வணக்கம் சகோ அம்பாளடியாள் !

கைவந்த கலைதான் உங்களைப்போல் எனக்கும்

தங்கள் வரவுக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி வாழ்க வளத்துடன் !

சீராளன்.வீ said...

வணக்கம் பகவான் ஜி !

இன்னும் மனம் சொக்கும் கவிகள் வரும் ஜி
தங்கள் வரவுக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி வாழ்க வளத்துடன் !

சீராளன்.வீ said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் !

தங்கள் வரவுக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி வாழ்க வளத்துடன் !

சீராளன்.வீ said...

வணக்கம் துளசிதரன் ஐயா !

எல்லோருக்கும் வரும் கவிதை
முயன்றால் முடியும் தானே

தங்கள் வரவுக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி வாழ்க வளத்துடன் !

சீராளன்.வீ said...

வணக்கம் சாரதா அம்மா !

அருமையான பாமாலைக்கு
அளித்த கருத்து இனிமை
தங்கள் வரவுக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி வாழ்க வளத்துடன் !

சீராளன்.வீ said...

வணக்கம் முனைவர் ஐயா திரு ஜம்புலிங்கம் அவர்களே !

தங்களைப் போன்றோர் கருத்திடத்
தகுதி பெற்றதே என் கவிதை
அதுவே போதும் ஐயா
தங்கள் வரவுக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி வாழ்க வளத்துடன் !

KILLERGEE Devakottai said...

இனிக்க, இனிக்க இனிய தமிழ்ச்சுவை நன்று
அருமையான பாமாலை கவிஞரே வாழ்த்துகள்
த.ம. 4

சிவகுமாரன் said...

ஆகா. அருமை. மீண்டும் மீண்டும் படித்து மகிழ்ந்தேன்.