வானமே எல்லை கொண்ட
வாலிபக் காதல் வந்தால்
மானமே போயும் நெஞ்சில்
மறந்திட முடியார் வாழ்வில்
கானமே தனிமை போக்கும்
காய்ந்துயிர் வேகும் தன்னுள்
ஊனமே அடைந்தும் எண்ணார்
உலகிது மாயம் என்றே !
ஆரணங் கவளால் வெற்றி
அடைந்தனன் என்று நாளும்
பாரணங் கொண்டால் வஞ்சம்
பறந்திடும் பஞ்சாய் ! வாழும்
காரணப் பொருளாய் ஏற்றுக்
கயமைகள் களைந்தால் வஞ்சி
பூரணப் பொய்கை வாழும்
புண்ணியக் கமலம் ஆவாள் !
காரிகை மனத்தைச் சேரும்
காதலால் வந்த கண்ணீர்
தூரிகை நழுவித் தன்னால்
துயர்வரைந் தழுத போதும்
சாரிகை எடுத்துச் சென்ற
சருகதாய் நெஞ்சம் வாடிப்
பேரிகை கொட்டிப் போகும்
பிறப்பிது பாவம் என்றே !
ஆலமே உண்டும் ஆசை
அகன்றிடா அன்பின் ஓசை
சீலமே சிறைதான் என்று
சிதைத்திடும் அறிவை நின்று
தூலமே துணியாய் மாறும்
துணிந்தவன் வாழ்க்கை தேறும்
காலமே கவிதை நண்பா!
கருத்தெழப் பாடு தண்பா!
********************
பிரியமுடன் பாவலர் .வீ. சீராளன்
12 comments:
காலம்தான்கவிதை
உண்மை
அருமை
நன்றி நண்பரே
அருமையான கவிதை. எனது வலைப்பூவுக்கும் நேரம் கிடைக்கும் போது வாருங்கள்.
தூலம் என்றால் பருத்தி என்பதை அறிந்து கொண்டேன் !தூய தமிழில் கவிதை தொடர வாழ்த்துகள் !
அருமையான கவிதை வாழ்த்துக்கள்
கவிதை...கவிதை...அருமை சகோ
என்ன அருமையான கவிதை!! அழகு தமிழ்! வாழ்த்துகள் சீராளன்.
அருமை.
காலமே கவிதை
காலமே பாடம்
காலமே மருந்து
வணக்கம் உறவுகளே !
கரந்தை ஜெயக்குமார்
Saratha J
Bagawanjee KA
ஹிஷாலீ
R.Umayal Gayathri
Thulasidharan V Thillaiakathu
சிவகுமாரன்
தங்கள் அன்பின் கருத்துகளுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்
வாழ்க வளத்துடன் !
அருமை அருமை
வணக்கம் நாகேந்திர பாரதி !
தங்கள் அன்பின் கருத்திற்கு
நெஞ்சம் நிறைந்த நன்றிகள்
வாழ்க வளத்துடன் !
ஆலமே உண்டும் ஆசை அகன்றிடா அன்பின் ஓசை சீலமே சிறைதான் என்று சிதைத்திடும் அறிவை நின்று தூலமே துணியாய் மாறும் துணிந்தவன் வாழ்க்கை தேறும் காலமே கவிதை நண்பா! கருத்தெழப் பாடு தண்பா!
அருமை! அருமை! வாழ்த்துக்கள் சகோ .
அருமை! அருமை! வாழ்த்துக்கள்
Post a Comment