கனியிதழில் கசியும்துளி
கண்டுமனம் வாடும் - தினம்
கருங்குழலாய் ஆடும் - விழி
கண்டகனா பாடும் - உயிர்க்
கவிதையிலே எழுதிவிடக்
கற்பனைகள் தேடும் !
பனிமலராய்ப் பருவவெழில்
பளிச்செனவே மின்னும் - அதில்
பதிந்தவிழி பின்னும் -உனைப்
பார்த்திருந்தால் இன்னும் - மனம்
பறிகொடுத்துப் பறந்துவிடும்
பருவங்களைத் தன்னும் !
அணியழகுத் தமிழ்மொழிபோல்
அணங்கவளின் பார்வை - இதழ்
அரும்புகளின் கோர்வை - இதம்
அளித்தமூச்சுப் போர்வை - அலை
அடித்துமனம் அறுக்கவரும்
அன்பிலாத தீர்வை !
துணிமணிகள் போல்கிழித்தாய்
தொங்குதடி நெஞ்சு - நீ
துவைத்தமனம் பிஞ்சு - நீள்
துயில்கொடுக்கும் நஞ்சு -இது
தொடர்கதையாய் ஆகுமுன்னே
தொட்டணைத்துக் கொஞ்சு !
உறங்குநிலை கண்டதடி
உள்ளிருக்கும் மூச்சு - உடல்
உணர்விழந்து போச்சு - இது
உறவுகளின் பேச்சு - மனம்
உருக்குலைந்தும் குறையவில்லை
உன்னினைவின் வீச்சு !
துறந்திடவே எண்ணுகிறேன்
துதிபலவும் பாடி - விதி
துரத்துதடி தேடி - இனித்
துளிர்விடுமோ தாடி - உடல்
துண்டுதுண்டாய் வெட்டிப்போட்டும்
துடிக்குதடி நாடி !
************