சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

Wednesday 31 May 2017

நீ துவைத்த மனம் !



கனியிதழில் கசியும்துளி
   கண்டுமனம் வாடும் - தினம்
   கருங்குழலாய் ஆடும் - விழி
   கண்டகனா பாடும் - உயிர்க்
   கவிதையிலே எழுதிவிடக்
   கற்பனைகள் தேடும் !

பனிமலராய்ப் பருவவெழில்
   பளிச்செனவே மின்னும் - அதில்
   பதிந்தவிழி பின்னும் -உனைப்
   பார்த்திருந்தால் இன்னும் - மனம்
   பறிகொடுத்துப் பறந்துவிடும்
   பருவங்களைத் தன்னும் !

அணியழகுத் தமிழ்மொழிபோல்
   அணங்கவளின் பார்வை - இதழ்
   அரும்புகளின் கோர்வை - இதம்
   அளித்தமூச்சுப் போர்வை - அலை
   அடித்துமனம் அறுக்கவரும்
   அன்பிலாத தீர்வை !

துணிமணிகள் போல்கிழித்தாய்
   தொங்குதடி நெஞ்சு - நீ
    துவைத்தமனம் பிஞ்சு - நீள்
    துயில்கொடுக்கும் நஞ்சு -இது
    தொடர்கதையாய் ஆகுமுன்னே
    தொட்டணைத்துக் கொஞ்சு !

உறங்குநிலை கண்டதடி
    உள்ளிருக்கும் மூச்சு - உடல்
    உணர்விழந்து போச்சு - இது
    உறவுகளின் பேச்சு - மனம்
    உருக்குலைந்தும் குறையவில்லை
    உன்னினைவின் வீச்சு !

துறந்திடவே எண்ணுகிறேன்
    துதிபலவும் பாடி - விதி
    துரத்துதடி தேடி - இனித்
    துளிர்விடுமோ தாடி - உடல்
    துண்டுகளாய்ப் போனபின்னும்
    துடிக்குதடி நாடி !
    
          ************