சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

Wednesday 9 December 2015

உன்னால் முடியாதெனில் ...!



நாரும் மணத்திடப் பூக்கள் சிரித்திடும்!
          நன்மண் கரங்கொடுக்கும்!
நாளும் மனிதரைச் சூழும் நன்னெறி
         நன்றே வரங்கொடுக்கும்!
சேரும் கனவினைச்  சிந்தை நிறைந்துளம்
         செய்தல் நலங்கொடுக்கும்!
சேவை சிறந்திடச் சீர்கள் நிறைந்திட
        செய்க புகழ்தொடுக்கும்!
ஊரும் எறும்பென ஒன்றாய் நடந்திட
        உயர்வு நிலையொளிக்கும்!
உள்ளம் துளைத்திடும் எண்ணம்  பகைஅழி
        ஒண்மை படையெடுக்கும்!
தீராக்  குறைகளும் திண்மை மனங்கொளத்
        தீயில் எரிந்திருக்கும்!
தேகச் சுமைகளைத் தேடி அழித்தெறி
        செல்வம் சொரிந்திருக்கும் !