சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

Thursday 17 November 2022

புரிந்தும் புரியாமலும் ....!



தேனடை போலிளம்  பேச்சுக ளும்!-அதில் 

தேங்கிம கிழ்ந்திடும் மூச்சுக ளும்! 

கானலாய்ப் போயின காட்சிக ளாய்!-அதன் 

கற்பனை வாழுது  நீட்சிக ளாய்!   


மூச்சற வைத்தவுன் மோனங்க ளும்!-அதில் 

மூழ்கிய ழிந்திட்ட  கானங்க ளும்!   

பேச்சறு பட்டவன் பாசைக ளாய்! -மீதம் 

பேசிய டங்கிடும் ஓசைக ளாய்! 


கோபக்க ணைவீசத் தேவையில் லை! - மீண்டும் 

குற்றுயி ராகிட ஆசையில்லை !

ஞாபக மொன்றுயிர் வாழட்டுமே !- உன் 

நட்புக  ளாலிதம்  சூழட்டுமே! 

 

சென்றுவா! தென்றலே நேரமில்லை- உன் 

சீண்டலி னித்தொட ஏதுமில்லை!   

வென்றுவா! வாழ்வென வாழ்த்துகி றேன்-உன் 

வேதமொ ழிக்குயிர் போர்த்துகி றேன்! 


Wednesday 9 November 2022

ஈர நினைவும் எரியும் கனவும் !




ஓசைக ளாயிர மாயும் -உளம் 

ஒன்றிய இசைபல வாயும் 

பூசையி லொன்றிய பூவாய் - என் 

புன்னகை ஏந்தி.நீ போவாய் !


ஓவிய மானது உள்ளம் -அதை

உரசிம கிழ்ந்தொரு உள்ளம் 

கூவிய வன்சொல்  இன்னும் - உயிர் 

குடைந்தென்  குருதியைப் பின்னும் !


மாற்றமே  இன்றிய வாழ்க்கை - சுடும் 

மனங்களால்   கருகிய யாக்கை 

தோற்றமே வெறுத்திடக் கூடும் - உயிர் 

தொலைக்கும் வழிகள் தேடும் !


காற்றலை தூங்கிய போதும்   - அதில் 

கசிந்திடும் பனித்துளி போலும் 

ஆற்றலை மறந்தும்  துடிக்கும் -  பல 

அணுக்களாய்ப்  பிரிந்துயிர் வெடிக்கும் !


ஒப்பிலா மாந்தராய்ப் பிறந்தோம் - சுய 

உணர்வினால் உறவுகள் துறந்தோம் 

தப்பிலா வாழ்க்கையும்  இல்லை - இத்

தரணியில் தனித்துவம்  தொல்லை !


மருவிய  நினைவதன்  வாசம் - விழி

மறைத்தழும்  நீரிலும் வீசும்

அருகிய பார்வையின் நேசம்- வரும்

அடுத்தொரு பிறப்பிலும் பேசும்!


தூர விலகிடும் போதும் - உயிர்

துளைத்த வார்த்தைகள் மோதும் 

ஈர நினைவுகள் இன்றி - எனை 

எரிக்கும் கனவே நன்றி !


பாவலர் சீராளன் 

Friday 4 November 2022

நீராம்பல் !




கண்ணுக்குள் நீரில்லை கனவுக்குள் வலியில்லை

காற்றோடு கலந்தாடும்  எண்ணம் - உயிர் 

மண்ணுக்குள் போனாலும் மனக்கூட்டில் தினம்காயும்

மனச்சாட்சி இல்லாதோர் வண்ணம் !


காலத்தைக் குறைகூறிக் காணாமல் போனோரால் 

காயங்கள் ஆறாது கேளீர் - இந்தச் 

சீலத்தைச் சிதைப்பார்கள் செய்கின்ற செயல்நம்மைச் 

சிறைவைக்கும் வழிதப்பப் பாரீர் !


ஊருக்கு உபதேசம் உரைக்கின்ற பேரெல்லாம் 

உண்மைக்கும்   வெளிப்பாட்டைத் தேடார் - தினம் 

பேருக்குப் புகழ்தேடித் பிழைக்கின்ற உளம்கொண்டார் 

பிறப்பெங்கும் மனச்சாட்சி நாடார் !  


வாரங்கள் ஆனாலும் வருடங்கள் போனாலும் 

வலிதந்த எண்ணத்தின் இருப்பு - மனப்

பாரங்கள் குறைந்தாலும் பதிந்திட்ட வடுதன்னின்

படிமங்கள் தினம்மூட்டும் நெருப்பு !


பேராசைப் படுகின்ற பிறப்புக்குள் நானில்லை 

பிறகேனோ? எனக்கிந்தப் பிரிவு  - எந்த 

நீராம்பல் ஆனாலும் நிலம்நீரின் தொலைவைத்தான் 

நிதம்காட்டும் அதுபோலென் தெரிவு !


காற்றாடும் கொடிதாங்கக்  கைநீட்டும் மரம்போல 

காதல்'தன் இருப்புக்கு மில்லை - தினம் 

சேற்றாடும் செடிதன்னில் செழிக்கின்ற மலரன்னச் 

சிலநேரச் சுகமிங்கு தொல்லை !


நியாயத்தைத் மறைக்கின்ற  நிகழ்காலச் சொந்தங்கள் 

நிலையாமை அறியாத தேட்டம்  - வாழ்வின் 

மாயத்தை உணராமல் மடிகின்ற நிலைவந்தும் 

மாறாத  பகையுள்ளக் கூட்டம் !


பாவலர் சீராளன் 

Thursday 27 October 2022

நாணப் புதையல் !




பொறைகொண்ட நாணத்தின்  புதையல் தேடிப் 

        புதைந்தகனா விழியோரப் புட்கள் நீவப் !

பிறைதேடும் வானத்தில் பிரியம் இன்றிப் 

        பிரிந்தவொளித் தாரகையாய் ! விம்மும் போதும்!

நிறைதாது வாசனையால்  நித்தம் நித்தம் 

        நீரசையும் காட்சிகளாய் உந்தன் எண்ணம் ! 

 மறந்தாலும் இனிக்கின்ற நினைவாய் நாளும் 

       மனதோடு உறவாடி மயக்கம் கொள்ளும்!

  


மண்மணக்க வைக்கின்ற மழைநீர் போலும்

         மாறுதலைத் தருகின்ற வார்த்தை போலும்

பண்பாட்டில் விளங்குமொரு பாதை தந்தாய்

         பருவநிலை கடக்கின்ற சிறகும் தந்தாய்!

கண்ணுக்குள் நீ..வந்த காட்சி யாவும்

        கம்பனுக்கும் தோணாத கற்ப னைபோல்!

எண்ணத்தில்  எதிரொலிக்கும் இதயம் வேர்க்க!

        எழுதுகின்ற கவிக்கெல்லாம்  எதுகை யாகும்!


பச்சையத்தின் மணம்போக்கிப் பருவம் நீங்கிப்

        பறந்துவிட்ட சருகாய்'என் மூச்சின் ஈரம்!

இச்சையற்ற போதினிலும்  எழுதும் வார்த்தை

       இசைக்காட்டின் பூவாக இனிக்கச் செய்யும்!

அச்சமிலை என்றவனின் அமிழ்தம் உண்டும்

       அருங்குறளின் முப்பாலும் அணைத்துக் கொண்டும்!

வச்சிரமாய் இதயத்தில் ஒட்டிக் கொண்ட

       வலிகளைய வாய்ப்பில்லை! வாழ்வின் சாபம்!


பாவலர் சீராளன் .வீ 

   

Wednesday 14 September 2022

மௌனத்தின் மொழி !



சிறைவைத்து  மேகத்தைச் சிதைத்தாலும் நெருப்பாகா!

சில்லென்ற காற்றொன்றே வீசும் !-விழி 

நிறைந்திட்ட கண்ணீரால் நினைவென்றும் அழியாது !

நிதமுன்றன் கதையொன்று பேசும் !


மெழுகொன்று உருகித்தன் ஒளிகொண்டு இருள்போக்கும்

மிடுக்காக இருக்கின்றேன் இன்றும்! - தினம்

அழுகின்ற நிலைவந்து அடிநெஞ்சம் வியர்த்தாலும் 

அன்பைத்தான் விதைப்பேன்’நான் என்றும் !


மொழியொன்றை  உதிர்க்கின்ற முனைப்பொக்கும் செயலுண்ட 

மோனத்தால் இளங்காலம் போச்சு!- இனிச் 

செழிக்கின்ற நிலைவந்தும் சிறகொன்றிப் பறக்காது

சிந்தைக்குள்  அடைபட்ட மூச்சு!


அலையின்றிக் கடலில்லை! அழகின்றிக் கலையில்லை! 

அறிந்தார்க்கு! மயக்கங்கள் இல்லை !-இந்த 

நிலையில்லா வாழ்வொன்றில்! நிறைகாணா நெஞ்சத்தில் 

நிதஞ்சேரும் தயக்கங்கள் தொல்லை!


இடிவந்த வானத்தில் இடர்பட்டும் கார்மேகம் 

இசைபோல மழைக்காற்று வீசும்!- உடல்  

அடிபட்டுச் சிதறுண்டு அழிந்தாலும் ! உயிர்கொண்ட ! 

அணுவொன்றின் துகளொன்று பேசும் !


நிழலில்லா வானத்தில் நிழல்தேடும் பருந்தாக ! 

நினைவெல்லாம்  வெறுமைக்குள் வாடும் !-உன் 

கழல்பட்ட மண்ணெங்கும் களிப்போடு மலர்பூக்கும் 

காட்சிக்குள் தேனாறு ஓடும் !


பாவலர் சீராளன் 

சொப்பன விழிகள் !




காரிகையா, காரெழிலா, காட்டுமல்லி வாசனையா?

கற்பனைகள் உறங்குநிலை போச்சு! -விழி

தூரிகையா, ஓவியமா  தோகையிவள் நாணுகையில் 

சொப்பனத்தில் கரையுதென்றன் மூச்சு!


ஏதுமொழி, ஏதெழுத்து ,என்றறியா நெஞ்சமதில் 

ஏடுகளைத் தேடவைத்த கோதை  !- மறை

ஓதுமொழி யாயிருக்கும் ஒண்டமிழைப் பாடவைத்து 

ஓசைநயம் ஊட்டிவிட்ட மேதை!


வாழுமொரு நாளிகையும் வாழ்த்துபல கூறுமடி

வஞ்சியெழில் தந்தயிறை தேடி!- வலி

சூழுமொரு வேளையிலும் சகந்தமிக வீசுமடி 

சொல்லினிய உன்பெயரைச் சூடி! 


பதவுரைகள் அற்றகவிப் பார்வையொன்று போதுமடி

பயனறிய  ஏதுமில்லை பாரில்!- இனிப்

புதுமொழிகள் கற்றுமென்ன புலமைகளைத் தந்துவிடும் 

புத்துயிராய் நீயிருக்கும்  போதில்!


கோடைமழைப் பெருக்காகக் கோபத்தில் நீ...நடக்கக் 

கொலுசுகளும் மோனித்த காட்சி!-குளிர்

வாடைதொட்டு  மொட்டுகளை வம்புசெய்த போதுமவை 

வாய்மூடி நின்றகதை யாச்சு!


காற்றினிசை போலினிக்கும் கவிதைமொழி கற்றவனைக் 

களவாடிச் சென்றதொரு மேகம்!- இவன்

தோற்றமினி இங்கில்லை தொலைந்தயிடம் பால்வெளிதான்

துகள்களெனப் பிரிந்திருக்கும் தேகம்!

 

பாவலர் சீராளன் 

Thursday 14 July 2022

எண்ணத்தின் சில எச்சங்கள் !



சிந்தனை கொண்டெழில் சேர்த்திருப் பாள்- உயிர்ச்

   சித்திரம் யாவையும் கோத்திருப் பாள்!

விந்தனை கொள்'இரு வேல்விழி யால்- கவி 

   வித்தகங்  கற்றத  மிழ்மொழி யாள் !


போரெழ வைத்திடும் புன்னகை யில் -சிலர்

   பொல்லாக் கனவறும் நித்திரை யில்!

காரெழ வைத்திடும் காரிகை யாள்- உளக்

   கற்பனை தீண்டிய  தூரிகை யாள்!


வண்ணக்க ருங்குழல் வாசனை யில்- பல

   வார்த்தைகள் தானெழும் தூங்கிசை யில் !

எண்ணப்பெ ருவெளி எல்லைக ளில்- இவள்

   இட்டமூச் செல்லாமே! மூங்கிசை கள்!


சங்குக ழுத்திடை சந்தமென -மழைச் 

    சாரல்கள் மோனைகள் கொண்டுவர!

பொங்குத மிழொரு பாவெழு தும் -அந்தப் 

    பாவிலி வள்பெயர் தேர்வெழு தும்!


நீலப்பெ ருவானத் தாரகை யாய்!- உளம்

    நீந்தும்மு துமொழிக் காரிகை யாய்!

கோலப்பு றாக்குணம் கொண்டிருப் பாள் !- இதங்

   கூடிய வார்த்தைகள் பூண்டிருப் பாள்!


காலத்தி னிமைகள் தேய்ந்து வர! -வளர்

   காலைத்த னிமைகள் காய்ந்து வர!

சோலைக்க னிச்சுவை  ஊட்டிடு வாள்  !- உளஞ்

   சொக்கிட  வாசனை  தீட்டிடு வாள் !


இன்னுமி ருந்திடும் ஏக்கம் பல - அதன்

   எச்சத்தி லூறிய தாக்கம் சில !

பின்னும்ம னத்துளே பேரிசை யாய்!- உயிர்ப்

   பேழையு டைத்திடும் சாரிகை யாய்!


காலப்ப ருவத்தி னோசைக ளை! - உன்

   காதுகள் சேர்த்திட நாணுகை யில் !

தூலப் பிடிமனத் துள்ளிருக் கும் ! - இவன்

   சொப்பனம் முற்றிய ழிந்திருக்கும்!

 

 பாவலர் சீராளன்