ஓரிரு மாதங்கள் ஒத்தையி லே - தினம்
உள்ளம் அழுதது மெத்தையி லே
போரிரு வாளிடைச் சத்தங்க ளாய் - எண்ணம்
போட்டுயிர் கீறுதே முத்தங்க ளாய் !
வெட்டவெ ளிப்பந்தல் போடலை யே ! - வஞ்சி
வெட்கத்தில் மாவிலை ஆடலை யே !
வட்டநி லாவெழில் காணலை யே - கொஞ்சும்
வண்ணக்க னாவரத் தோணலை யே !
அச்சக மேறலை பத்திரி கை - ஐயோ
அங்குமே காணலை ஒத்திரு கை
இச்சையு டைக்குது தேகவில் லை - மனம்
இன்னுந்து டிக்குது நோகவில் லை !
அன்றிலு ளக்கிய பூக்களெ ன - ஆசை
அங்குமிங் கானது ஏக்கமெ ழ
ஒன்றிய ழிந்தது ஓர்மயக் கம் - இன்னும்
ஓடியொ ளிக்கின்றாய் ஏன்தயக் கம் !
உச்சிவ ரையாசை ஏறிய தும் - உன்றன்
ஊடலி லெல்லாமும் மாறிய தும்
வச்சிர மாயுயிர் ஒட்டிநிற் கும் - காடு
வந்துமு டல்தனைத் தொட்டுநிற் கும் !
நானாக நானாக நானிலை யே - அந்த
நந்தவ னக்குயில் பாடலை யே
மானாகப் பாய்ந்தவள் ஆடலை யே - வண்டு
மார்கழிப் பூவையும் தேடலை யே !
காதலைப் பாடுமோ யாழினி ழை - அந்தக்
காற்றைந னைக்குமோ ஈரம ழை !
வாசலெ ழில்தரும் வாசமுல் லை - இனி
வாவென் றழைத்திட யாருமில் லை !
பாவலர் வீ.சீராளன்