ஓசைக ளாயிர மாயும் -உளம்
ஒன்றிய இசைபல வாயும்
பூசையி லொன்றிய பூவாய் - என்
புன்னகை ஏந்தி.நீ போவாய் !
ஓவிய மானது உள்ளம் -அதை
உரசிம கிழ்ந்தொரு உள்ளம்
கூவிய வன்சொல் இன்னும் - உயிர்
குடைந்தென் குருதியைப் பின்னும் !
மாற்றமே இன்றிய வாழ்க்கை - சுடும்
மனங்களால் கருகிய யாக்கை
தோற்றமே வெறுத்திடக் கூடும் - உயிர்
தொலைக்கும் வழிகள் தேடும் !
காற்றலை தூங்கிய போதும் - அதில்
கசிந்திடும் பனித்துளி போலும்
ஆற்றலை மறந்தும் துடிக்கும் - பல
அணுக்களாய்ப் பிரிந்துயிர் வெடிக்கும் !
ஒப்பிலா மாந்தராய்ப் பிறந்தோம் - சுய
உணர்வினால் உறவுகள் துறந்தோம்
தப்பிலா வாழ்க்கையும் இல்லை - இத்
தரணியில் தனித்துவம் தொல்லை !
மருவிய நினைவதன் வாசம் - விழி
மறைத்தழும் நீரிலும் வீசும்
அருகிய பார்வையின் நேசம்- வரும்
அடுத்தொரு பிறப்பிலும் பேசும்!
தூர விலகிடும் போதும் - உயிர்
துளைத்த வார்த்தைகள் மோதும்
ஈர நினைவுகள் இன்றி - எனை
எரிக்கும் கனவே நன்றி !
பாவலர் சீராளன்
2 கருத்துகள்:
சந்தக் கவிதை சிந்தை கவர்ந்தது
தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி
கருத்துரையிடுக