காரிகையா, காரெழிலா, காட்டுமல்லி வாசனையா?
கற்பனைகள் உறங்குநிலை போச்சு! -விழி
தூரிகையா, ஓவியமா தோகையிவள் நாணுகையில்
சொப்பனத்தில் கரையுதென்றன் மூச்சு!
ஏதுமொழி, ஏதெழுத்து ,என்றறியா நெஞ்சமதில்
ஏடுகளைத் தேடவைத்த கோதை !- மறை
ஓதுமொழி யாயிருக்கும் ஒண்டமிழைப் பாடவைத்து
ஓசைநயம் ஊட்டிவிட்ட மேதை!
வாழுமொரு நாளிகையும் வாழ்த்துபல கூறுமடி
வஞ்சியெழில் தந்தயிறை தேடி!- வலி
சூழுமொரு வேளையிலும் சகந்தமிக வீசுமடி
சொல்லினிய உன்பெயரைச் சூடி!
பதவுரைகள் அற்றகவிப் பார்வையொன்று போதுமடி
பயனறிய ஏதுமில்லை பாரில்!- இனிப்
புதுமொழிகள் கற்றுமென்ன புலமைகளைத் தந்துவிடும்
புத்துயிராய் நீயிருக்கும் போதில்!
கோடைமழைப் பெருக்காகக் கோபத்தில் நீ...நடக்கக்
கொலுசுகளும் மோனித்த காட்சி!-குளிர்
வாடைதொட்டு மொட்டுகளை வம்புசெய்த போதுமவை
வாய்மூடி நின்றகதை யாச்சு!
காற்றினிசை போலினிக்கும் கவிதைமொழி கற்றவனைக்
களவாடிச் சென்றதொரு மேகம்!- இவன்
தோற்றமினி இங்கில்லை தொலைந்தயிடம் பால்வெளிதான்
துகள்களெனப் பிரிந்திருக்கும் தேகம்!
பாவலர் சீராளன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக