சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

Friday 2 September 2016

காதல் சிதைவுகள் !


காற்றுக் கூடக் காதல் தூதில்
கனத்துப் போகக் கண்டேன்  - அதை
ஆற்றுப் படுத்த அலையும் போதில்
அங்கச் சிதைவுகள் கொண்டேன் !

காதல் இல்லா உலகம் என்றே
காட்டக் கூடுமோ சொல்லு  - அதை
வேதம் என்றே விரும்பிக் கொண்டால்
விரையும் உன்மேல் கல்லு !


ஊரார் பிள்ளை ஊட்டி வளர்க்கும்
ஒப்பில் லாதார் முன்னும்  - பகை
தீரார் போலும் தீஞ்சுவைக் காதலைத்
திட்டித் தீர்ப்பார் பின்னும்  !

மக்கள் சேர்ந்தால் சமூகம் என்றே
மானிட வியலும் சொல்லும் - மனம்
சொக்கிப் போகக் சுவைத்தால் காதல்
சொந்தம் கூடக் கொல்லும்  !

ஏழைக் காதல் என்றும் சாகும்
இதுவே நாட்டில் உண்மை - தினம்
கோழை ஆகிக் குற்றம் சுமக்கும்
குழந்தை எனிலும் பெண்மை !

சாதி என்றும் வேதம் என்றும்
சமூகம் தன்னுள் பிரிக்கும் - அதை
மோதிக் கொண்டே முளைத்தால்  காதல்
மூடர் என்றே எரிக்கும் !

சுட்டும் நெஞ்சைத் துரத்தும் வலிகள்
சுகமாய் ஆக்கும் காதல் - அதைத்
திட்டம் போட்டே தீர்த்துக் கட்டின்
திண்ணம் ஆகும் சாதல் !

தேனோ  அவளின் தீந்தமிழ் என்றே
திகைக்கும் காதல் சொற்கள் - பலர்
ஏனோ காதல்  இழந்தால் மட்டும்
எறியத் தேடுவர் கற்கள் !

காரணம் இன்றிக் காயக் காதல்
கருவைக் கொடுப்பர் பலரும் - காதல்
வாரணம் என்றே வம்சம் சொல்லின்
வாழ்விடம் இன்றியும்  மலரும்  !

ஈனச் செயலே என்றே உள்ளம்
எடுத்துச் சொல்லும் நல்லார்  - தம்
மானச்  சுகத்தில் மகிழ்தலை மறைக்க
மறந்தும்  உண்மை  சொல்லார்  !

பொல்லார் மனமும் பூவனம் ஆகும்
புலனுள் காதல்  வந்தால் - அதைச்
சொல்லால் அடித்துச் சுட்டெரிப் பார்கள்
சமூகம் என்னும்  பந்தால் !

             ***********

பிரியமுடன்   பாவலர் .வீ.சீராளன் 

3 comments:

Unknown said...

#பலர் ஏனோ காதல் இழந்தால் மட்டும் எறியத் தேடுவர் கற்கள் !#
இந்த நிலை என்றுதான் மாறுமோ !

கரந்தை ஜெயக்குமார் said...

ஏழைக் காதல் என்றும் சாகும் இதுவே நாட்டில் உண்மை - தினம் கோழை ஆகிக் குற்றம் சுமக்கும் குழந்தை எனிலும் பெண்மை !

மனதைத் தொட்ட வரிகள் நண்பரே

UmayalGayathri said...

மக்கள் சேர்ந்தால் சமூகம் என்றே மானிட வியலும் சொல்லும் - மனம் சொக்கிப் போகக் சுவைத்தால் காதல் சொந்தம் கூடக் கொல்லும் !

உண்மையான வரிகள்....

அழகான கவிதை சகோ