பாடும் கானம் பௌர்ணமி நிலவு
பைந்தமிழ் போற்றும் காவியம் - நீ
ஓடும் நிலவின் ஒளியில் வரைந்த
ஒப்பிலாத் தாரகை ஓவியம்
கனவோ நினைவோ கம்பன் கவியோ
காரிகை உன்விழி அறியேன் -தினம்
எனையே இழந்து இதயம் எரித்தும்
என்னவள் உன்னைப் பிரியேன் !
மீண்டும் மீண்டும் ஓயாத் தென்றல்
மெட்டிகள் போடும் சத்தம் -அவை
தீண்டத் தீண்டத் தினமும் ரசித்தேன்
தேனாய் ஏறுது பித்தம் !
எல்லைகள் இல்லா வானம் போலே
எதுகை தந்தாய் கவிக்கும் - விழி
வில்லைகள் தன்னால் வெறுப்பைத் தந்தால்
விழி..நீர் கொட்டித் தவிக்கும் !
காலையில் உன்றன் கனவுகள் சுமக்கக்
காத்துக் கிடப்பேன் தினமும் - மலர்ச்
சோலையில் வீசும் சுகந்தம் உன்னால்ச்
சொக்கிப் போகும் மனமும் !
வேதம் நான்கும் விளங்கிக் கொண்டும்
விடுகதை ஆனவள் உன்னால் - உயிர்
சேதம் இன்றிச் சிரச்சே தத்தைச்
செய்யத் துணியுது தன்னால் !
காற்றும் உன்றன் குழலைத் தேடிக்
கவிதை சொல்லிப் போகும் - உயிர்
போற்றும் அன்பில் புன்னகை தடவிப்
புல்லாங் குழலில் ஏகும் !
நாடியில் மெலிதாய் நளினம் காட்டும்
நங்கை உனக்கும் மச்சம் - இசைக்
கோடியில் பாடும் கொவ்வை இதழாய்க்
குழைந்தைச் சிரிப்பின் எச்சம் !
கவிதை ரசிக்கும் கயல்விழி உனக்கும்
கவிஞன் இவன்மேல் வெறுப்பு - மனம்
தவிக்கும் நொடிகள் தடுத்தல் உன்றன்
தாய்மைக் குணத்தின் பொறுப்பு !
நண்பா என்றே நயமாய்ச் சொன்னாய்
நானும் உணர்ந்தேன் அன்பு - நாளை
வெண்பா எழுதி விடியலில் தருவேன்
விழி..நீ திறக்கும் முன்பு !
பிரியமுடன் சீராளன்
17 comments:
அருமையான வரிகள் பாவலரே,
தொடருங்கள் நாங்கள் ரசிக்கிறோம்,,
நன்றி,,
ரசித்தேன். நன்றி.
கனவோ நினைவோ கம்பன் கவியோ காரிகை உன்விழி அறியேன் -தினம் எனையே இழந்து இதயம் எரித்தும் என்னவள் உன்னைப் பிரியேன் !
நான் மிகவும் ரசித்தேன் பாவலரே வாழ்த்துகள்
தமிழ் மணம் 2
சத்தம் போட்டு அழுகிற தேயுன்
சாந்த மான இதயம் - அவள்
நித்தம் உன்றன் நினைவினில் கலந்தால்
நிம்மதி இல்லா உதயம் !
அருமை அருமை! தொடர வாழ்த்துக்கள் சீர் !
அருமை சீராளன். வரிகள் அனைத்தையும் ரசித்தோம்..
வணக்கம்
சீர்
அற்புதமான கவிநயம் மிக்க வரிகள்.
ஓசை நயமிக்க வரிகள் படித்து மகிழ்தேன் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அருமை
அருமை
ரசித்தேன்நண்பரே
மெட்டிகள் போடும் சத்தம் -அவை
தீண்டத் தீண்டத் தினமும் ரசித்தேன்
தேனாய் ஏறுது பித்தம் !//
மெட்டி இன்னுமா சத்தம் போடுகிறது.....?
அருமையான வாசிக்க ருசிக்கும் வரிகள்...
அருமையான கவிதை பாவலரே! இப்போது எல்லாம் அதிகம் தங்கள் பதிவு வருவது இல்லை காதலில் மூழ்கிவிட்டிரோ[[[[
மீண்டும் மீண்டும் படித்து மகிழ்ந்தேன். வாழ்த்துக்கள்
மீண்டும் மீண்டும் படித்து மகிழ்ந்தேன். வாழ்த்துக்கள்
மிக்க நன்றி பேராசிரியரே
மிக்க நன்றி ஐயா
மிக்க நன்றி ஐயா
மிக்க நன்றி பேராசிரியரே
அற்புதமான கவிதை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்//
Post a Comment