சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

Friday 4 November 2022

நீராம்பல் !




கண்ணுக்குள் நீரில்லை கனவுக்குள் வலியில்லை

காற்றோடு கலந்தாடும்  எண்ணம் - உயிர் 

மண்ணுக்குள் போனாலும் மனக்கூட்டில் தினம்காயும்

மனச்சாட்சி இல்லாதோர் வண்ணம் !


காலத்தைக் குறைகூறிக் காணாமல் போனோரால் 

காயங்கள் ஆறாது கேளீர் - இந்தச் 

சீலத்தைச் சிதைப்பார்கள் செய்கின்ற செயல்நம்மைச் 

சிறைவைக்கும் வழிதப்பப் பாரீர் !


ஊருக்கு உபதேசம் உரைக்கின்ற பேரெல்லாம் 

உண்மைக்கும்   வெளிப்பாட்டைத் தேடார் - தினம் 

பேருக்குப் புகழ்தேடித் பிழைக்கின்ற உளம்கொண்டார் 

பிறப்பெங்கும் மனச்சாட்சி நாடார் !  


வாரங்கள் ஆனாலும் வருடங்கள் போனாலும் 

வலிதந்த எண்ணத்தின் இருப்பு - மனப்

பாரங்கள் குறைந்தாலும் பதிந்திட்ட வடுதன்னின்

படிமங்கள் தினம்மூட்டும் நெருப்பு !


பேராசைப் படுகின்ற பிறப்புக்குள் நானில்லை 

பிறகேனோ? எனக்கிந்தப் பிரிவு  - எந்த 

நீராம்பல் ஆனாலும் நிலம்நீரின் தொலைவைத்தான் 

நிதம்காட்டும் அதுபோலென் தெரிவு !


காற்றாடும் கொடிதாங்கக்  கைநீட்டும் மரம்போல 

காதல்'தன் இருப்புக்கு மில்லை - தினம் 

சேற்றாடும் செடிதன்னில் செழிக்கின்ற மலரன்னச் 

சிலநேரச் சுகமிங்கு தொல்லை !


நியாயத்தைத் மறைக்கின்ற  நிகழ்காலச் சொந்தங்கள் 

நிலையாமை அறியாத தேட்டம்  - வாழ்வின் 

மாயத்தை உணராமல் மடிகின்ற நிலைவந்தும் 

மாறாத  பகையுள்ளக் கூட்டம் !


பாவலர் சீராளன் 

6 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

பேராசைப்படுகின்ற பிறப்புக்குள் என்றென்றும் அடங்காத நண்பருக்கு வாழ்த்துகள்
அருமை

KILLERGEE Devakottai said...

சிறப்பான வரிகள் பாவலரே... இரசித்தேன் வாழ்க வளமுடன்.

சீராளன்.வீ said...

மிக்க நன்றி கரந்தை மைந்தரே !
தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்க நலம் !

சீராளன்.வீ said...

மிக்க நன்றி ஜி !
தங்கள் ரசனைக்கு நன்றி வாழ்க நலம் !

கோமதி அரசு said...

கவிதை நன்றாக இருக்கிறது.
வாழ்க வளமுடன்

சீராளன்.வீ said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ வாழ்க நலன் !