நிலவின் நிழலில் உன்
இமைகளின் அசைவுகள்
எழுதிச் செல்கிறது
நேரம்காலமற்ற எம்
ஒவ்வொரு சந்திப்புக்களும்
வறட்டுக் காவல்களால்
சிதைக்கப்பட்ட போதும்
நிறம் மாறவில்லை நம்
உதட்டோர ஏக்கங்கள்....!
பனிக்கால இரவுகளும்
ஜனிக்காத மொட்டுக்களும்
மனதோடு மௌனம் காக்க
பூக்கள் கூட பூப்பெய்தின
பருவக்காற்றாய் எம் மூச்சு
பலதடவை மோதியதால்.....!
மருதாணி நிறங்களுக்குள்
மறைந்திருந்த உன் விரல்கள்
மணி மணியாய் கவி எழுத
மயங்கிய காகிதத்தில்
நானும் மகிழ்ந்திருந்தேன்...!
விடியும் பொழுதுவரை
விண்மீன்கள் விழி மூட
நாம் மட்டும்
இமைக்காத அதிசயங்கள்
இன்றும் வானுக்குள்
சத்தியமாய் சாட்சி சொல்லும்...!
யுகங்களைக் கடந்து
மொழிகள் மறந்து
எழுத்துருக்கள் இடம்மாறி
இயங்கியல் கிழக்கு மேற்காய்
பூகோளத்தைப் புரட்டிப் போட்டாலும்
உன் இமைகள் எழுதும் நினைவுகள் ......!
என்றும் மாற்றமின்றி மலர்ந்திருக்கும்...!
ப்ரியமுடன் சீராளன்
No comments:
Post a Comment