நன்றாய்க் கவிநல்கிட நவின்றாள் ! மின்னும்
பொன்னென ஒளிர்ந்தாள் பொய்கையில் -கன்னிக்
கனவுகள் மலர்ந்தது கண்ணில்! வாழ்ந்தேன்
தினமொரு யுகத்தினை தின்று !
பண்ணோடு பரதப் பாவமும் தந்தாள்
எண்ணிலா இன்பம் என்னிலே -கண்ணில்
கவலை போக்கினேன்! கனியிதழ் அசைந்திட
தேவதை மொழியிலும் தேன்!
கொஞ்சும் குரல் கொண்டாள் ! குயிலினை
விஞ்சிடக் கூவினாள் ! வியந்தேன்- நெஞ்சில்
பகலிலும் பௌர்ணமி படர்ந்தது! அவளே
அகலிகை போலென் அணங்கு!
அடிக்கரும் பமிர்தம் ஆனாள்! சுவைத்தேன்
விடியலில் பூவாய் விரிந்தாள்!-கடிமணத்
தீண்டலில் தவித்தேன்! தீர்ந்தது மோகம்
வேண்டுதல் அற்றது வேதம்
விழிநுதலால் விம்முவாள் விண்ணொளி தருவாள்
எழிலென தவழ்ந்தாள் என்னில் -செழித்தேன்
மழலையின் மென்மை மனதினில் வெண்மை
குழலினில் வாழும் குலம்!
புரிதல் கொண்டவள் புரிந்திட மறந்தாள்
எரிந்தது இதயம் !எள்ளினாள் !-பிரிந்தாள்
தனிமை தொடர்ந்தது ! தாகம் மறந்தது
இனிமை இழந்ததே இரவு !
சொல்லில் எழுதிடில் சொட்டும் உதிரம்
மெல்லக் கனவுகள் மெய்தீண்டும்-கல்லில்
வடித்திட முயன்றேன் ! வலியின் கனம்மிக
துடித்தே வாழும் துயர்!
பிரியமுடன் சீராளன்
12 comments:
பொய்யாகிப் போனவாழ்வில்
மெய்யது சோர்ந்த தோழா
மைதீர்ந்த கண்ணென ஒருநாள்
உண்மையுணரும் நாள்வரும் பொறும்...
நன்றாக உள்ளது கவிதை! வாழ்த்துக்கள்!
மிக்க நன்றி இளமதி
என்னுயிரின் ஓசை கேட்டதற்கும் ,கருத்திட்டமைக்கும்
நன்றாய்க் இருக்குதென்று
நயமாய் கவி சொன்னீர்
வெண்பா எழுதிடவே விளைகின்றேன்
உண்மை எல்லாம் ஒப்புவித்து
வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
தனிமை தொடர்ந்தது ! தாகம் மறந்தது
இனிமை இழந்ததே இரவு !
என்னத்த சொல்ல இப்படித்தானா எல்லோருக்குமே
புரிதல் கொண்டவள் புரிந்திட மறந்தாள் .
புரிந்திருந்தால் இப்படி அழகான வார்த்தைகள் வந்திருக்காதே.
உயிரின் ஓசையில் அன்பை பிரிந்த பிரிவின் ராகம் கேட்கின்றது.
முதல் வருகை! வாழ்த்துக்கள்!
வாருங்கள் கவியாழி கண்ணதாசன் அவர்களே!
தங்கள் முதல்வருகைக்கு நன்றி.....ஆம் எல்லோருக்கும் இப்படியும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் நன்றி ...............வாழ்கவளமுடன்
மிக்க நன்றி சசிகலா ....ஆம் புரியாத வாழ்வில்தான் புரிதல்கள் பாடமாகும் உண்மைதானே ....மிக்க நன்றி வாழ்கவளமுடன்
வாருங்கள் உஷா அன்பரசு அவர்களே!
தங்கள் முதல்வருகைக்கு நன்றி.....
வரவேற்கிறேன் என்னுயிரின் ஓசை கேட்க்கிறதா..?
அழகாய் கருத்திட்டு வாழ்த்தியமைக்கு மீண்டும் நன்றிகள் ................வாழ்கவளமுடன்
''...நன்றாய்க் கவிநல்கிட நவின்றாள் ! மின்னும்
பொன்னென ஒளிர்ந்தாள் பொய்கையில் -கன்னிக்
கனவுகள் மலர்ந்தது கண்ணில்! வாழ்ந்தேன் ...'''அப்படியே தொடர்ந்து சோகமின்றி வாழ்தல் சிறப்பு.
நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
அருமை . ஈற்றடி ஒவ்வொன்றும் அழகு.
வெண்பா வடிவத்தில் நன்றாகவே உள்ளது.
ஆனால் வெண்பா இலக்கணத்தோடு பொருந்தவில்லை.
மிக்க நன்றி சிவகுமாரன் அவர்களே என் வலைப்பூ வந்தமைக்கும் கருத்திட்டமைக்கும் ..உண்மைதான் நான் வெண்பா வடிவத்தில்தான் எழுதினேன் ஆனால் வெண்பா இலக்கணம் அதிகம் அறியாததால் அதை பின்பற்ற முடியவில்லை
மிக்க நன்றி கொவைக்கவி அவர்களே ...என் வலைப்பூ வந்தமைக்கும் கருத்திட்டமைக்கும் வாழ்கவளமுடன்
Post a Comment