சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

Thursday, 17 November 2022

புரிந்தும் புரியாமலும் ....!



தேனடை போலிளம்  பேச்சுக ளும்!-அதில் 

தேங்கிம கிழ்ந்திடும் மூச்சுக ளும்! 

கானலாய்ப் போயின காட்சிக ளாய்!-அதன் 

கற்பனை வாழுது  நீட்சிக ளாய்!   


மூச்சற வைத்தவுன் மோனங்க ளும்!-அதில் 

மூழ்கிய ழிந்திட்ட  கானங்க ளும்!   

பேச்சறு பட்டவன் பாசைக ளாய்! -மீதம் 

பேசிய டங்கிடும் ஓசைக ளாய்! 


கோபக்க ணைவீசத் தேவையில் லை! - மீண்டும் 

குற்றுயி ராகிட ஆசையில்லை !

ஞாபக மொன்றுயிர் வாழட்டுமே !- உன் 

நட்புக  ளாலிதம்  சூழட்டுமே! 

 

சென்றுவா! தென்றலே நேரமில்லை- உன் 

சீண்டலி னித்தொட ஏதுமில்லை!   

வென்றுவா! வாழ்வென வாழ்த்துகி றேன்-உன் 

வேதமொ ழிக்குயிர் போர்த்துகி றேன்! 


Wednesday, 9 November 2022

ஈர நினைவும் எரியும் கனவும் !




ஓசைக ளாயிர மாயும் -உளம் 

ஒன்றிய இசைபல வாயும் 

பூசையி லொன்றிய பூவாய் - என் 

புன்னகை ஏந்தி.நீ போவாய் !


ஓவிய மானது உள்ளம் -அதை

உரசிம கிழ்ந்தொரு உள்ளம் 

கூவிய வன்சொல்  இன்னும் - உயிர் 

குடைந்தென்  குருதியைப் பின்னும் !


மாற்றமே  இன்றிய வாழ்க்கை - சுடும் 

மனங்களால்   கருகிய யாக்கை 

தோற்றமே வெறுத்திடக் கூடும் - உயிர் 

தொலைக்கும் வழிகள் தேடும் !


காற்றலை தூங்கிய போதும்   - அதில் 

கசிந்திடும் பனித்துளி போலும் 

ஆற்றலை மறந்தும்  துடிக்கும் -  பல 

அணுக்களாய்ப்  பிரிந்துயிர் வெடிக்கும் !


ஒப்பிலா மாந்தராய்ப் பிறந்தோம் - சுய 

உணர்வினால் உறவுகள் துறந்தோம் 

தப்பிலா வாழ்க்கையும்  இல்லை - இத்

தரணியில் தனித்துவம்  தொல்லை !


மருவிய  நினைவதன்  வாசம் - விழி

மறைத்தழும்  நீரிலும் வீசும்

அருகிய பார்வையின் நேசம்- வரும்

அடுத்தொரு பிறப்பிலும் பேசும்!


தூர விலகிடும் போதும் - உயிர்

துளைத்த வார்த்தைகள் மோதும் 

ஈர நினைவுகள் இன்றி - எனை 

எரிக்கும் கனவே நன்றி !


பாவலர் சீராளன் 

Friday, 4 November 2022

நீராம்பல் !




கண்ணுக்குள் நீரில்லை கனவுக்குள் வலியில்லை

காற்றோடு கலந்தாடும்  எண்ணம் - உயிர் 

மண்ணுக்குள் போனாலும் மனக்கூட்டில் தினம்காயும்

மனச்சாட்சி இல்லாதோர் வண்ணம் !


காலத்தைக் குறைகூறிக் காணாமல் போனோரால் 

காயங்கள் ஆறாது கேளீர் - இந்தச் 

சீலத்தைச் சிதைப்பார்கள் செய்கின்ற செயல்நம்மைச் 

சிறைவைக்கும் வழிதப்பப் பாரீர் !


ஊருக்கு உபதேசம் உரைக்கின்ற பேரெல்லாம் 

உண்மைக்கும்   வெளிப்பாட்டைத் தேடார் - தினம் 

பேருக்குப் புகழ்தேடித் பிழைக்கின்ற உளம்கொண்டார் 

பிறப்பெங்கும் மனச்சாட்சி நாடார் !  


வாரங்கள் ஆனாலும் வருடங்கள் போனாலும் 

வலிதந்த எண்ணத்தின் இருப்பு - மனப்

பாரங்கள் குறைந்தாலும் பதிந்திட்ட வடுதன்னின்

படிமங்கள் தினம்மூட்டும் நெருப்பு !


பேராசைப் படுகின்ற பிறப்புக்குள் நானில்லை 

பிறகேனோ? எனக்கிந்தப் பிரிவு  - எந்த 

நீராம்பல் ஆனாலும் நிலம்நீரின் தொலைவைத்தான் 

நிதம்காட்டும் அதுபோலென் தெரிவு !


காற்றாடும் கொடிதாங்கக்  கைநீட்டும் மரம்போல 

காதல்'தன் இருப்புக்கு மில்லை - தினம் 

சேற்றாடும் செடிதன்னில் செழிக்கின்ற மலரன்னச் 

சிலநேரச் சுகமிங்கு தொல்லை !


நியாயத்தைத் மறைக்கின்ற  நிகழ்காலச் சொந்தங்கள் 

நிலையாமை அறியாத தேட்டம்  - வாழ்வின் 

மாயத்தை உணராமல் மடிகின்ற நிலைவந்தும் 

மாறாத  பகையுள்ளக் கூட்டம் !


பாவலர் சீராளன் 

Thursday, 27 October 2022

நாணப் புதையல் !




பொறைகொண்ட நாணத்தின்  புதையல் தேடிப் 

        புதைந்தகனா விழியோரப் புட்கள் நீவப் !

பிறைதேடும் வானத்தில் பிரியம் இன்றிப் 

        பிரிந்தவொளித் தாரகையாய் ! விம்மும் போதும்!

நிறைதாது வாசனையால்  நித்தம் நித்தம் 

        நீரசையும் காட்சிகளாய் உந்தன் எண்ணம் ! 

 மறந்தாலும் இனிக்கின்ற நினைவாய் நாளும் 

       மனதோடு உறவாடி மயக்கம் கொள்ளும்!

  


மண்மணக்க வைக்கின்ற மழைநீர் போலும்

         மாறுதலைத் தருகின்ற வார்த்தை போலும்

பண்பாட்டில் விளங்குமொரு பாதை தந்தாய்

         பருவநிலை கடக்கின்ற சிறகும் தந்தாய்!

கண்ணுக்குள் நீ..வந்த காட்சி யாவும்

        கம்பனுக்கும் தோணாத கற்ப னைபோல்!

எண்ணத்தில்  எதிரொலிக்கும் இதயம் வேர்க்க!

        எழுதுகின்ற கவிக்கெல்லாம்  எதுகை யாகும்!


பச்சையத்தின் மணம்போக்கிப் பருவம் நீங்கிப்

        பறந்துவிட்ட சருகாய்'என் மூச்சின் ஈரம்!

இச்சையற்ற போதினிலும்  எழுதும் வார்த்தை

       இசைக்காட்டின் பூவாக இனிக்கச் செய்யும்!

அச்சமிலை என்றவனின் அமிழ்தம் உண்டும்

       அருங்குறளின் முப்பாலும் அணைத்துக் கொண்டும்!

வச்சிரமாய் இதயத்தில் ஒட்டிக் கொண்ட

       வலிகளைய வாய்ப்பில்லை! வாழ்வின் சாபம்!


பாவலர் சீராளன் .வீ 

   

Wednesday, 14 September 2022

மௌனத்தின் மொழி !



சிறைவைத்து  மேகத்தைச் சிதைத்தாலும் நெருப்பாகா!

சில்லென்ற காற்றொன்றே வீசும் !-விழி 

நிறைந்திட்ட கண்ணீரால் நினைவென்றும் அழியாது !

நிதமுன்றன் கதையொன்று பேசும் !


மெழுகொன்று உருகித்தன் ஒளிகொண்டு இருள்போக்கும்

மிடுக்காக இருக்கின்றேன் இன்றும்! - தினம்

அழுகின்ற நிலைவந்து அடிநெஞ்சம் வியர்த்தாலும் 

அன்பைத்தான் விதைப்பேன்’நான் என்றும் !


மொழியொன்றை  உதிர்க்கின்ற முனைப்பொக்கும் செயலுண்ட 

மோனத்தால் இளங்காலம் போச்சு!- இனிச் 

செழிக்கின்ற நிலைவந்தும் சிறகொன்றிப் பறக்காது

சிந்தைக்குள்  அடைபட்ட மூச்சு!


அலையின்றிக் கடலில்லை! அழகின்றிக் கலையில்லை! 

அறிந்தார்க்கு! மயக்கங்கள் இல்லை !-இந்த 

நிலையில்லா வாழ்வொன்றில்! நிறைகாணா நெஞ்சத்தில் 

நிதஞ்சேரும் தயக்கங்கள் தொல்லை!


இடிவந்த வானத்தில் இடர்பட்டும் கார்மேகம் 

இசைபோல மழைக்காற்று வீசும்!- உடல்  

அடிபட்டுச் சிதறுண்டு அழிந்தாலும் ! உயிர்கொண்ட ! 

அணுவொன்றின் துகளொன்று பேசும் !


நிழலில்லா வானத்தில் நிழல்தேடும் பருந்தாக ! 

நினைவெல்லாம்  வெறுமைக்குள் வாடும் !-உன் 

கழல்பட்ட மண்ணெங்கும் களிப்போடு மலர்பூக்கும் 

காட்சிக்குள் தேனாறு ஓடும் !


பாவலர் சீராளன் 

சொப்பன விழிகள் !




காரிகையா, காரெழிலா, காட்டுமல்லி வாசனையா?

கற்பனைகள் உறங்குநிலை போச்சு! -விழி

தூரிகையா, ஓவியமா  தோகையிவள் நாணுகையில் 

சொப்பனத்தில் கரையுதென்றன் மூச்சு!


ஏதுமொழி, ஏதெழுத்து ,என்றறியா நெஞ்சமதில் 

ஏடுகளைத் தேடவைத்த கோதை  !- மறை

ஓதுமொழி யாயிருக்கும் ஒண்டமிழைப் பாடவைத்து 

ஓசைநயம் ஊட்டிவிட்ட மேதை!


வாழுமொரு நாளிகையும் வாழ்த்துபல கூறுமடி

வஞ்சியெழில் தந்தயிறை தேடி!- வலி

சூழுமொரு வேளையிலும் சகந்தமிக வீசுமடி 

சொல்லினிய உன்பெயரைச் சூடி! 


பதவுரைகள் அற்றகவிப் பார்வையொன்று போதுமடி

பயனறிய  ஏதுமில்லை பாரில்!- இனிப்

புதுமொழிகள் கற்றுமென்ன புலமைகளைத் தந்துவிடும் 

புத்துயிராய் நீயிருக்கும்  போதில்!


கோடைமழைப் பெருக்காகக் கோபத்தில் நீ...நடக்கக் 

கொலுசுகளும் மோனித்த காட்சி!-குளிர்

வாடைதொட்டு  மொட்டுகளை வம்புசெய்த போதுமவை 

வாய்மூடி நின்றகதை யாச்சு!


காற்றினிசை போலினிக்கும் கவிதைமொழி கற்றவனைக் 

களவாடிச் சென்றதொரு மேகம்!- இவன்

தோற்றமினி இங்கில்லை தொலைந்தயிடம் பால்வெளிதான்

துகள்களெனப் பிரிந்திருக்கும் தேகம்!

 

பாவலர் சீராளன் 

Thursday, 14 July 2022

எண்ணத்தின் சில எச்சங்கள் !



சிந்தனை கொண்டெழில் சேர்த்திருப் பாள்- உயிர்ச்

   சித்திரம் யாவையும் கோத்திருப் பாள்!

விந்தனை கொள்'இரு வேல்விழி யால்- கவி 

   வித்தகங்  கற்றத  மிழ்மொழி யாள் !


போரெழ வைத்திடும் புன்னகை யில் -சிலர்

   பொல்லாக் கனவறும் நித்திரை யில்!

காரெழ வைத்திடும் காரிகை யாள்- உளக்

   கற்பனை தீண்டிய  தூரிகை யாள்!


வண்ணக்க ருங்குழல் வாசனை யில்- பல

   வார்த்தைகள் தானெழும் தூங்கிசை யில் !

எண்ணப்பெ ருவெளி எல்லைக ளில்- இவள்

   இட்டமூச் செல்லாமே! மூங்கிசை கள்!


சங்குக ழுத்திடை சந்தமென -மழைச் 

    சாரல்கள் மோனைகள் கொண்டுவர!

பொங்குத மிழொரு பாவெழு தும் -அந்தப் 

    பாவிலி வள்பெயர் தேர்வெழு தும்!


நீலப்பெ ருவானத் தாரகை யாய்!- உளம்

    நீந்தும்மு துமொழிக் காரிகை யாய்!

கோலப்பு றாக்குணம் கொண்டிருப் பாள் !- இதங்

   கூடிய வார்த்தைகள் பூண்டிருப் பாள்!


காலத்தி னிமைகள் தேய்ந்து வர! -வளர்

   காலைத்த னிமைகள் காய்ந்து வர!

சோலைக்க னிச்சுவை  ஊட்டிடு வாள்  !- உளஞ்

   சொக்கிட  வாசனை  தீட்டிடு வாள் !


இன்னுமி ருந்திடும் ஏக்கம் பல - அதன்

   எச்சத்தி லூறிய தாக்கம் சில !

பின்னும்ம னத்துளே பேரிசை யாய்!- உயிர்ப்

   பேழையு டைத்திடும் சாரிகை யாய்!


காலப்ப ருவத்தி னோசைக ளை! - உன்

   காதுகள் சேர்த்திட நாணுகை யில் !

தூலப் பிடிமனத் துள்ளிருக் கும் ! - இவன்

   சொப்பனம் முற்றிய ழிந்திருக்கும்!

 

 பாவலர் சீராளன் 

Thursday, 5 November 2020

நாணக் குடை !



ஏக்கங்க ளைந்திடும் பாசறை யோ -தமிழ் 

ஏடும்ம ணத்திடும் வாசனை யோ ?

தூக்கங்க லைத்திடும் கன்னத்தெ ழில் - அவள் 

தோகைவி ரித்திடும் வண்ணக்கு யில்  !


மின்னல சைத்திடும் மோகவி ழி - உயிர் 

மீட்டியி சைத்திடும் கோதைமொ ழி 

தன்னல மற்றொரு பார்வையி லே - கவி 

தாண்டவ மாடுது   ஓர்மையி லே ! 


பண்ணில டங்கிடாப் பாவின மோ ?  - கம்பன் 

பாடம றந்தொரு பூவின மோ ?

எண்ணில டங்கிடாக்  கற்பனை கள் - அவள்

ஏக்கத்தி லாயிரம் சொப்பனங் கள்!


ஒய்யார மாகவே சாய்ந்திருப் பாள்- வண்ண 

ஒப்பனை  அற்றெழில்  சேர்த்திருப் பாள்!

பொய்யாமொ ழிக்குள்ளே பூத்தம றை - இவள் 

போகுமிட மெங்கும்  பூக்கும்பி றை ! 


ஆயக லைகளில்  ஓவிய மோ? - வஞ்சி 

ஆனந்த யாழிசைக் கீர்த்தனை யோ ?   

தூயம ணந்தரும் ஜாதிமுல் லை -என்றும் 

தூவிடுந் தாதினில்  பேதமில் லை !


நாணக்கு டையவள் கண்ணிமை கள் - வாழும் 

நாகரி கங்களின் வல்லமை கள் 

காணக்கி டைக்குமோ தோணவில் லை  - இவன்

கானல்நீ ராகினான் சாரலில் லை !


பாவலர் சீராளன்.வீ 

Saturday, 27 July 2019

அமிழ்தானவள் !



சித்தம் நுழைந்திடும் சோர்வைச் - சிறு 
சேலைத் தலைப்பினால் கழைவாள் 
நித்தம் உறங்கிடும் போதில்  - தலை 
நீவித் துயில்தர விளைவாள் !

வெல்லக் குவளையாய் இதழ்கள்  - இரு 
விழிகளும் அமிழ்தக்  குறள்கள் 
செல்லக் குழந்தையாய்ச்  சிரிப்பு  - இதம் 
சேர்க்கும் செந்தமிழ்   விரிப்பு    !

முல்லை மணந்தரும் பேச்சில் - நறு 
முகையென மலர்வாள்  மூச்சில் 
இல்லை எனும்சொல் அறியாள் - தினம் 
இறைமனம் காட்டும்  நெறியாள் !

எது..கை கொடுத்தும்  இசைப்பாள் - கவி 
எதுகை விடுத்தும்  இனிப்பாள் 
மதுகை இருந்தும் மறைப்பாள்  - மலர்   
மது..கை கொடுத்தும் முறைப்பாள்  !

புத்தகம் அவளது தங்கை - எனைப்  
பொலிய வைத்திடும் மங்கை 
வித்தகம் புரியும் விரலாள்  - இசை 
வியக்கும் மதுரக் குரலாள் !

பச்சைப் பார்வைகள் தந்தாள் - என் 
பருவத் தீபுக வந்தாள் 
இச்சைப் போர்வைகள் களைந்தாள் - மனம் 
இருக்கும் இடத்தில் நுழைந்தாள் !

வண்ணக் கனவுகள் இன்னும் - உயிர் 
வளர்த்துக் கவியாய்  மின்னும்   
எண்ணச் சிறகுகள்  அல்லும் - வலி  
இருந்தும் பறந்ததைச்  சொல்லும் !

Friday, 8 March 2019

கைக்கிளை அல்ல !




ஓரிரு மாதங்கள் ஒத்தையி லே - தினம் 
உள்ளம் அழுதது மெத்தையி லே 
போரிரு வாளிடைச் சத்தங்க ளாய் - எண்ணம் 
போட்டுயிர் கீறுதே முத்தங்க ளாய் !

வெட்டவெ ளிப்பந்தல் போடலை யே ! - வஞ்சி 
வெட்கத்தில் மாவிலை ஆடலை யே !
வட்டநி லாவெழில் காணலை யே - கொஞ்சும் 
வண்ணக்க னாவரத்  தோணலை யே !

அச்சக மேறலை பத்திரி கை - ஐயோ 
அங்குமே காணலை ஒத்திரு கை 
இச்சையு டைக்குது தேகவில் லை - மனம் 
இன்னுந்து டிக்குது நோகவில் லை !

அன்றிலு ளக்கிய பூக்களெ ன - ஆசை 
அங்குமிங் கானது ஏக்கமெ ழ 
ஒன்றிய ழிந்தது ஓர்மயக் கம் - இன்னும் 
ஓடியொ ளிக்கின்றாய் ஏன்தயக் கம் !

உச்சிவ ரையாசை ஏறிய தும் - உன்றன் 
ஊடலி லெல்லாமும் மாறிய தும் 
வச்சிர மாயுயிர் ஒட்டிநிற் கும் - காடு 
வந்துமு டல்தனைத் தொட்டுநிற் கும் !

நானாக நானாக நானிலை யே - அந்த 
நந்தவ னக்குயில் பாடலை யே 
மானாகப் பாய்ந்தவள் ஆடலை யே - வண்டு 
மார்கழிப் பூவையும் தேடலை யே !

காதலைப் பாடுமோ யாழினி ழை - அந்தக் 
காற்றைந னைக்குமோ ஈரம ழை !
வாசலெ ழில்தரும் வாசமுல் லை - இனி 
வாவென் றழைத்திட யாருமில் லை !

பாவலர் வீ.சீராளன்

Saturday, 2 September 2017

பச்சை இதழ் இட்ட மது !



சந்தமிகத் தந்தகவிச்  சிந்தனையும்  எந்தனுயிர்
வந்தவளைச் சார்ந்துமணம் வீசுதே - அவள்
கந்தமிகக் கொண்டகுழல் விந்தையெனத் தென்றலதும்  
உந்தியெழத் தந்துதமிழ் பேசுதே  !


அந்திவருந் தந்தியவள் அஞ்சிறையுள் இட்டதனால்
முந்திவரும் கந்தமதைக் கூறுதே  -  விழி
குந்திமகன் அம்பெனவும் கோதைமகன் அன்பெனவும்
விந்தைபுரிந் துள்ளமதைக் கீறுதே !

எந்தயிடம்  வந்திடினும் ஏந்திழையாள் அன்புதனைச் 
சிந்தைதனில்  வைத்துமகிழ்ந்  தாடுவேன் - விதி
மந்தகுணந்  தந்துவுடல்  மண்ணறையில் இட்டபினும்   
மஞ்சரியாள்  கொஞ்சுதமிழ்  தேடுவேன் !

பங்கயமாய்க் காலையவள் பண்ணழகுப்  பார்வைதரப்
பாவலனாய்ப்  பாடிமகிழ்ந் தாடுவேன் - இல்லை
கங்குலெழும் முன்னொளியில் இங்கவளும்  இல்லையெனில்  
கற்பனைகள் ஈன்றமனம்  மூடுவேன் !

பண்பொளிரும்   பைங்கொடியாள் பஞ்சுமொழிப் புன்னகையாள்
பச்சையிதழ்  இட்டமதுக் காரிகை   - வான்
தண்ணொளிரும் வெண்மதியின் தங்கையெனத் தன்னினைவைத்
தந்துயிரைத் தொட்டபுதுத்  தாரகை !


பாவலர் வீ. சீராளன்

Wednesday, 31 May 2017

நீ துவைத்த மனம் !



கனியிதழில் கசியும்துளி
   கண்டுமனம் வாடும் - தினம்
   கருங்குழலாய் ஆடும் - விழி
   கண்டகனா பாடும் - உயிர்க்
   கவிதையிலே எழுதிவிடக்
   கற்பனைகள் தேடும் !

பனிமலராய்ப் பருவவெழில்
   பளிச்செனவே மின்னும் - அதில்
   பதிந்தவிழி பின்னும் -உனைப்
   பார்த்திருந்தால் இன்னும் - மனம்
   பறிகொடுத்துப் பறந்துவிடும்
   பருவங்களைத் தன்னும் !

அணியழகுத் தமிழ்மொழிபோல்
   அணங்கவளின் பார்வை - இதழ்
   அரும்புகளின் கோர்வை - இதம்
   அளித்தமூச்சுப் போர்வை - அலை
   அடித்துமனம் அறுக்கவரும்
   அன்பிலாத தீர்வை !

துணிமணிகள் போல்கிழித்தாய்
   தொங்குதடி நெஞ்சு - நீ
    துவைத்தமனம் பிஞ்சு - நீள்
    துயில்கொடுக்கும் நஞ்சு -இது
    தொடர்கதையாய் ஆகுமுன்னே
    தொட்டணைத்துக் கொஞ்சு !

உறங்குநிலை கண்டதடி
    உள்ளிருக்கும் மூச்சு - உடல்
    உணர்விழந்து போச்சு - இது
    உறவுகளின் பேச்சு - மனம்
    உருக்குலைந்தும் குறையவில்லை
    உன்னினைவின் வீச்சு !

துறந்திடவே எண்ணுகிறேன்
    துதிபலவும் பாடி - விதி
    துரத்துதடி தேடி - இனித்
    துளிர்விடுமோ தாடி - உடல்
    துண்டுகளாய்ப் போனபின்னும்
    துடிக்குதடி நாடி !
    
          ************

Tuesday, 13 September 2016

விருத்தப் பா ,என் விருப்புப் பா !



நீரடித் துழுத மண்ணில் 
      நிறைவள மேகி மீண்டும் 
வேரடி முளைத்தல் போலும் 
      விளமுடன் தேமா காயும் 
சீரடிச் சிறப்பை மேவிச்  
      செப்பிடும் விருத்தப் பாவில் 
தாரடி கொத்தைப் போன்று 
      தழைத்திடும் எதுகை மோனை!

Friday, 2 September 2016

காதல் சிதைவுகள் !


காற்றுக் கூடக் காதல் தூதில்
கனத்துப் போகக் கண்டேன்  - அதை
ஆற்றுப் படுத்த அலையும் போதில்
அங்கச் சிதைவுகள் கொண்டேன் !

காதல் இல்லா உலகம் என்றே
காட்டக் கூடுமோ சொல்லு  - அதை
வேதம் என்றே விரும்பிக் கொண்டால்
விரையும் உன்மேல் கல்லு !

Friday, 19 August 2016

காலமே கவிதை நண்பா !





வானமே எல்லை கொண்ட  
       வாலிபக் காதல் வந்தால்  
மானமே போயும் நெஞ்சில் 
       மறந்திட முடியார் வாழ்வில்  
கானமே தனிமை போக்கும் 
       காய்ந்துயிர் வேகும்  தன்னுள்    
ஊனமே அடைந்தும் எண்ணார்
       உலகிது மாயம் என்றே !

Friday, 6 May 2016

எனையறியாமல் மனம்பறித்தாய் ....!



சிந்தையி லூறிய செந்தமி ழே - என்னைச்
சீண்டிடு முன்விழிப் பார்வைக ளே
எந்தப்பி றப்பதன் எச்சங்க ளோ - இன்னும்
என்னுயிர் ஆளுமுன் நாணங்க ளே !

Saturday, 6 February 2016

கவிதை மொழி !


பாடும் கானம் பௌர்ணமி நிலவு 
பைந்தமிழ் போற்றும்  காவியம் - நீ  
ஓடும் நிலவின் ஒளியில் வரைந்த 
ஒப்பிலாத் தாரகை ஓவியம்

கனவோ நினைவோ கம்பன் கவியோ 
காரிகை  உன்விழி  அறியேன் -தினம் 
எனையே இழந்து  இதயம் எரித்தும் 
என்னவள் உன்னைப் பிரியேன் !

Wednesday, 27 January 2016

குருவருள் பதிற்றந்தாதி !



ஓடித் திரிந்த உணர்வுகளை ஒன்றாக்கிப்
பாடிக் களிக்கப் பகலிரவாய்ப் - பாடங்கள்
நாடிக் கொடுத்திட்ட நற்குருவுக் கோர்புகழைத் 
தேடிக் கொடுப்பேன் தினம்!


1. கற்றுப் பயனடையக் காத்திருக்கும் எல்லோர்க்கும்
    பற்றுடனே பாடம் பயில்விக்கும் - நற்கவிஞர்!
    என்னுள் கவியும் இருப்பதைக் கண்டுணர்ந்து 
    நன்றே'கற் பித்தார் நயந்து!

Wednesday, 16 December 2015

உயிரோவியம்!



ஆருமறி யாமலுயிர் ஆடும் வலியூட்டும்
சாருமலர்ப்  பூங்குழலி  சாய்ந்துவிடத்  - தீருமிதன்
பாரமொரு நாளில் பறந்திருக்கும் ! பாவையவள்
நேரமொரு நீள்கனவில் நெஞ்சு !

இதழ்முகிழும் ரோசாவோ! இன்றமிழோ! மின்னும்
நுதலழகும் நூற்பாவோ? கன்னம்   - புதுக்கவிதைப்
பூவனமோ? பொய்கைமலர்ப் பூந்தாதோ? என்னவளின் 
ஓவியமும் கொள்ளும் உயிர் !